தண்ணீரில் மூழ்கியவர்களைக் கரைக்குக் கொண்டுவந்து அவரது வயிற்றில் அழுத்தி தண்ணீரை உமிழ்வதுபோல சினிமாக்களில் காட்சி அமைப்பார்கள். ஆனால் இது தவறானது.தண்ணீரில் மூழ்கியவர் தண்ணீர் குடிக்கும்போது அது நுரையீரல் மற்றும் வயிற்றுக்குள் செல்லும். வயிற்றுக்குள் செல்லும் நீரால் பாதிப்பு இல்லை. இதை அழுத்தி வெளியே எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை.
நுரையீரலுக்குச் சென்ற தண்ணீரே உயிர் இழப்புக்குக் காரணம். நுரையீரலுக்குள் சென்ற தண்ணீரை வெளியேற்றும் சிகிச்சையை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களால் மட்டுமே செய்ய முடியும்.
நீரில் மூழ்கியவருக்கு முதலுதவி செய்யும்போது அவரைத் தரையில் படுக்கவைத்து மூச்சு உள்ளதா எனப் பார்க்க வேண்டும். சுவாசம் இல்லை எனில், அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கலாம்.

தண்ணீரில் மூழ்கியவருக்கு மூச்சும் நாடித் துடிப்பும் இல்லை என்றால் இறந்துவிட்டார் என்று நீங்களாக முடிவுகட்டிவிட வேண்டாம்.
மயக்க நிலையில் இருப்பவருக்கு சி.பி.ஆர் (Cardio-pulmonary Resuscitation) எனப்படும் இதய செயற்கை சுவாசமூட்டல் முதலுதவியைச் செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
சி.பி.ஆர். இதய சுவாசமூட்டல்:
பாதிப்பு அடைந்தவருக்கு சுவாசம் நின்றுபோனாலோ, நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தாலோ, சி.பி.ஆர். செய்வதன் மூலம் அவரது உடலில் ரத்த ஓட்டத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும். இதனால் ஆக்சிஜன் இழப்பால் ஏற்படும் இறப்பு மற்றும் மூளை சேதத்தையும் தடுக்க முடியும்.
எப்படிச் செய்வது?
பாதிப்பு அடைந்தவரைச் சமதளத்தில் படுக்கவைத்து, அவருக்குப் பக்கவாட்டில் அமர்ந்துகொண்டு இடது மார்புப் பகுதியில் நம்முடைய இரண்டு கைகளின் உள்ளங்கைப் பகுதியை ஒன்று சேர்த்து அரை செ.மீ. அளவுக்கு மென்மையாக அழுத்த வேண்டும்.

மூன்று முறை அழுத்திய பின்பு அவரது வாயோடு வாய்வைத்துக் காற்றை ஊத வேண்டும். (மீட்பு சுவாசம் பார்க்கவும்) இதேபோன்று தொடர்ந்து செய்ய வேண்டும்.
அழுத்தும்போது வேகமாக அழுத்தினால் விலா எலும்பு உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே கவனம் தேவை.
குழந்தைகளுக்கு: குழந்தைகளுக்கு சி.பி.ஆர். முதல் உதவி செய்யும்போது, உள்ளங்கையைக் கொண்டு அழுத்தம் கொடுக்காமல், இரண்டு விரல்களால் கொடுக்க வேண்டும். அதேபோல 15 முறை மட்டும்தான் அழுத்தம் தர வேண்டும்.

மீட்பு சுவாசம்:
பாதிப்பு அடைந்தவரைப் படுக்கவைத்துத் தாடையைச் சிறிது உயர்த்தி அவரது மூக்கின் நுனிப்பகுதியை மூடி அழுத்திப் பிடித்துக்கொண்டு அவரது வாயை நன்கு திறந்துகொள்ளவும்.

பின்பு உங்களது வாயை நன்கு திறந்து காற்றை நன்கு உள் இழுத்துக்கொண்டு அவரது வாயோடு வாய்வைத்து மூடி பின்னர் உள் இழுத்த காற்றை வெளிவிடவும். இதனால் பாதிப்பு அடைந்தவருக்குச் சுவாசம் கிடைக்கும். |